ஈப்போ, ஏப் 30- நோன்புப் பெருநாளின் போது முறையான அனுமதியின்றி எல்லைகளைக் கடக்க குறிப்பாக கிழக்குக் கரை மாநிலங்களுக்கு செல்ல நினைப்போர் அந்த திட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
பெருநாள் காலத்தில் அனைத்து எல்லைகளிலும் கடுமையான கண்காணிப்பு பணிகளை போலீசார் மேற்கொள்ளவுள்ளதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ மியோர் ஃபரிடாலாதராஷ் வாகிட் கூறினார்.
பெருநாளை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு செல்வதில் பொதுமக்களில் பலர் இன்னும் பிடிவாதமாக இருக்கும் காரணத்தால் சாலை தடுப்புகளில் வாகனங்கள் மீது கடுமையான சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் சொன்னார்.
பகாங்கையும் பேராக்கையை இணைக்கும் முக்கிய சாலையாக கேமரன் மலை சாலை விளங்குகிறது. குறிப்பாக பகாங் மற்றும் கிளந்தானுக்குச் செல்வோர் இச்சாலையை முக்கிய வழித்தடமாக பயன்படுத்துகின்றனர் என்றார் அவர்.
ஆகவே, இச்சாலையை மையமாக கொண்டு கடுமையான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இங்கு நடைபற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெவித்தார்.