கோலாலம்பூர், ஏப் 30- போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் சிலாங்கூரிலுள்ள அரசாங்க மருத்துவனை ஒன்றில் பணி புரியும் மருத்துவர் ஒருவர் உள்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெட்டாலிங் ஜெயா, தாமான் ஸ்ரீ மஞ்சாவில் உள்ள வீட்டில் கடந்த புதனன்று போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் அந்த அறுவரும் கைது செய்யப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபக்ருடின் அப்துல் ஹமிட் கூறினார்.
கைது செய்யப்பட்ட 26 முதல் 30 வயது வரையிலான அந்த அறுவரும் உள் நாட்டினராவர் என்று நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர்க கூறினார்.
அந்த சோதனையின் போது 4,900 வெள்ளி மதிப்புள்ள 1,913 கிராம் எடை கொண்ட கஞ்சா என நம்பப்படும் பொடியாக்கப்பட்ட காய்ந்த இலைகள் மற்றும் 1,450 வெள்ளி ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்றார் அவர்.
அச்சோதனையின் போது 139,500 வெள்ளி மதிப்புள்ள நான்கு வாகனங்கள் மற்றும் இரு மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் மேலும் சொன்னார்.
கைதானவர்களில் ஐவர் போதைப் பொருளை பயன்படுத்தியுள்ளது தொடக்கக் கட்ட மருத்துவ பரிசோதனையில் தெரியவந்ததாக கூறிய அவர், அவர்கள் அனைவர் மீதும் குற்றப்பதிவுகள் எதுவும் இல்லை என்பதை போலீஸ் ஆவணங்கள் காட்டுகின்றன என்றார்.
கைதான அனைவரும் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணைக்காக ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.