ஷா ஆலம், மே 9- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் நேற்று காஜாங் மற்றும் செமினியில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனையில் 1,681 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களில் 116 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. காஜாங்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 85 பேருக்கும் செமினியில் 31 பேருக்கும் நோய்த் தொற்று கண்டறியப்பட்டதாக கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.
காஜாங் தொகுதியில் நடத்தப்பட்ட சோதனைகளில் 1,052 பேரும் செமினி தொகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 629 பேரும் பங்கு கொண்டதாக அவர் சொன்னார்.
அவ்விரு தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் பங்கு கொண்ட 1,681 பேரில் 1,422 பேர் செலங்கா செயலி வாயிலாக பதிவு செய்த வேளையில் எஞ்சியோர் நேரடியாக சோதனை மையங்களுக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இம்மாதம் 8ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் மாதம் 10 ஆம் தேதி வரை தினசரி இரு தொகுதிகள் வீதம் அனைத்து 56 தொகுதிகளிலும் கோவிட்-19 இலவச பரிசோதனையை மேற்கொள்ள மாநில அரசு திட்டமிட்டுள்ளது.