புத்ரா ஜெயா, மே 12– நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) தொடர்ந்து கடைபிடித்து வரும்படி மலேசியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
உருமாற்றம் கண்ட புதிய வகை கோவிட்-19 நோய்த் தொற்று கிளந்தான், கெடா, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதால் இந்நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவைப்படுவதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
இது வரை நாட்டில் அச்சமூட்டும் வகையிலான மூன்று வகை உருமாறிய நோய்த் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த உருமாறிய தொற்றினால் 62 பேரும் இங்கிலாந்து நோய்த் தொற்றினால் எண்மரும் இந்தியாவின் நோய்த் தொற்றினால் இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
இந்த உருமாறிய நோய்த் தொற்று வெகு விரைவாக பரவக்கூடியது என்பதோடு மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. இந்த நோய்த் தொற்று இளைஞர்களையும் பெருமளவில் பாதிக்கிறது என்றார் அவர்.
இந்த உருமாறிய நோய்த் தொற்று இதர மாநிலங்களுக்கும் பரவியுள்ளதா என்பதை கண்டறியும் நடவடிக்கையில் சுகாதார அமைச்ச ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அச்சமூட்டும் வகையிலான நோய்த் தொற்று என உலக சுகாதார நிறுவனத்தால் வகை படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் உருமாறிய நோய்த் தொற்றுக்கு கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி இந்திய பிரஜை ஒருவர் பலியானதாகவும் அவர் சொன்னார்.