கோலாலம்பூர், மே 12– நோன்பு பெருநாளின் போது வீடமைப்பு பகுதிகளில் எஸ்.ஒ.பி. விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய போலீசார் டிரோன் சாதனத்தை பயன்படுத்தவுள்ளனர்.
இந்த டிரோன் சாதனத்தின் வழி பொதுமக்கள் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறாமலிருப்பதை உறுதி செய்ய முடியும் என்று புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் நடவடிக்கை அதிகாரி எஸ்.ஏ.சி. எம்.வி. ஸ்ரீகுமார் கூறினார்.
போலீசார் வழக்கம் போல் வீடமைப்பு பகுதிகளில் வாகனங்களில் ரோந்துப் பணியை மேற்கொள்வர்.அதே சமயம், டிரோன் சாதனத்தை பயன்படுத்தும் புதிய அணுகுறையையும் அவர்கள் கையாள்வர் என்று அவர் சொன்னார்.
எனினும், தங்கள் பகுதிகளில் ரோந்து பணியை மேற்கொள்ள டிரோன் சாதனத்தை பயன்படுத்துவதற்கு மாவட்ட போலீஸ் தலைவர்கள் செய்யும் விண்ணப்பத்தின் அடிப்படையில் இந்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் எஸ்.ஒ.பி.விதிமீறல்களை கண்டறிய அங்குள்ள வருகையாளர் பதிவு புத்தகத்தை போலீசார் சோதனையிடுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நோன்பு பெருநாள் காலத்தில் தங்கள் அண்டை வீட்டுக்காரர்கள் சம்பந்தப்பட்ட எஸ்.ஒ.பி. விதிமீறல்கள் தொடர்பில் பொதுமக்கள் புகார் தரும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.