ஷா ஆலம், மே 15– நோன்பு பொருநாள் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறியது தொடர்பில் ஆறு போலீஸ்காரர்கள் மற்றும் புக்கிட் அமான் முன்னாள் உயர் போலீஸ் அதிகாரி மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை எஸ்.ஒ.பி. விதிகளை மீறியது தொடர்பில் 17 பி.யு.(ஏ) 225/2021 விதியின் கீழ் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்படுவதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பகாருடின் மாட் தாயிப் கூறினார்.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு வெ.2,000 முதல் வெ.10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என அவர் சொன்னார்.
இந்த விசாரணை அறிக்கை மேல் நடவடிக்கைக்காக விரைவில் சட்டத் துறை தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வீடொன்றில் போலீஸ்காரர்கள் கும்பலாக அமர்ந்து உணவருந்தும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது.
கடந்த 2007ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்ற புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை முன்னாள் துணை இயக்குநரான கைருடின் மாட் டேசா அந்த படத்தை தனது முக நுலில் பதிவேற்றம் செய்திருந்தார்.
அந்த வீட்டின் முன் ஆறு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை சோதனையிட வந்த அந்த ஆறு போலீஸ்காரர்களுக்கும் அந்த முன்னாள் அதிகாரி விருந்து வழங்கியதை அந்த படம் சித்திரித்தது.