ஷா ஆலம், மே 16– நோன்பு பெருநாளின் இரண்டாம் தினத்தன்று நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிமுறைகளை மீறியதற்காக சிலாங்கூரில் 122 பேருக்கு குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டன.
அவற்றில் 21 குற்றங்கள் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளை கடக்க முயன்றது தொடர்பானவை என்று மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது கூறினார்.
அம்பாங்கில் உள்ள ஒரு வீட்டில் உள்நாட்டினரை சம்பந்தப்படுத்திய விருந்து நிகழ்வு நடத்தப்பட்டது தொடர்பில் ஒரு குற்றப்பதிவு வழங்கப்பட்ட வேளையில் காஜாங்கில் விருந்து நிகழ்வில் கலந்து கொண்ட மியன்மார் பிரஜைகளை உள்ளடக்கிய கும்பல் ஒன்று பிடிபட்டதாக அவர் கூறினார்.
நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு ஏதுவாக எஸ்.ஒ.பி. விதிமுறைகளைத் தொடர்ந்து கடைபிடித்து வரும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
விருந்து, இறப்பு போன்ற நிகழ்வுகளில் எஸ்.ஒ.பி. விதி மீறல்கள் நிகழ்வது கண்டறியப்பட்டால் அது குறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தரும்படியும் அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.