ஷா ஆலம், மே 16– சிலாங்கூரில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள 80 விழுக்காட்டிற்கும் அதிகமான கட்டில்கள் கோவிட்-19 நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
கோலாலம்பூர், பினாங்கு, சரவா கெடா, பேராக் ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளும் இதே அளவை எட்டியுள்ளதாக அவர் சொன்னார்.
நாடு முழுவதும் உள்ள 78 அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் பல்கலைக்கழக மருத்துவமனைகள் கோவிட்-19 நோயாளிகள் மற்றும் இதர வகை நோயாளிகளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 1,388 கட்டில்களை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவற்றில் 850 கட்டில்கள் பிரத்தியேகமாக கோவிட்-19 நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வேளையில் இந்த எண்ணிக்கை அவ்வப்போது அதிகரிக்கப்பட்டும் வருகிறது என்றார் அவர்.
தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளுக்கான கட்டில்கள் 80 விழுக்காடு நிரம்பிவிட்டன என்பது வருத்தமளிக்கும் விஷயமாகும் என்றார் அவர்.