ஷா ஆலம், மே 16- மூன்றாம் பிரிவு கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணத்தால் செர்டாங்கில் உள்ள மேப்ஸ் எனப்படும மலேசிய விவசாய கண்காட்சி பூங்காவில் உள்ள கோவிட்-19 தனிமைப்படுத்தும் மற்றும் சிகிச்சை (பி.கே.ஆர்.சி.) மையத்தில் நிலைமை சவால்மிக்கதாக மாறியுள்ளதாக சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை கூறுகிறது.
கடந்த ஜனவரி மாதம் இந்த மையத்தில் 60 படுக்கைகள் மட்டும் இருந்தன, எனினும் தற்போது மூன்றாம் பிரிவு நோயாளிகளுக்காக 757 கட்டில்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை 1,000 படுக்கைகளாக அதிகரிக்கும் திட்டமும் உள்ளது என அத்துறை இன்று கூறியது.
கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் அதிகரித்து வரும் நோய்த் தொற்று சம்பவங்களைக் கருத்தில் கொண்டு சுகாதாரத் துறையின் சுமையை குறைக்கும் நோக்கில் இங்கு படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக அது தெரிவித்தது.
மூன்றாம் பிரிவு நோயாளிகள் உடனடி சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்படுவர். சீரான உடல் நிலையில் இருக்கும் ஒன்றாம் மற்றும் இரண்டாம் பிரிவு நோயாளிகள் டி.ஜி. மண்டபத்தில் தங்க வைக்கப்படுவர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம், இந்த மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டினர் மற்றும் உள்நாட்டினரை பிரிப்பதற்கான நடவடிக்கையிலும் பி.கே.ஆர்.சி. ஈடுபட்டு வரும் எனவும் அது கூறியது.