ஷா ஆலம், மே 21- நாடு முழுவதும் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமலாக்குவது குறித்து விவாதிப்பதற்காக இன்று கூடும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சிறப்பு கூட்டத்திற்கு மாநில மந்திரி புசார்கள் மற்றும் முதலமைச்சர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் தாம் கலந்து கொள்ளவிருப்பதை சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி உறுதி படுத்தினார். "ஆகக் கடைசி நிலவரம்- தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள மந்திரி புசார்கள் மற்றும் முதலமைச்சர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தற்போதுதான் நான் தகவலை பெற்றேன். "மீண்டும் அழைத்தமைக்கு நன்றி. சிலாங்கூர் மக்களின் கருத்துகளை முன்வைப்பதற்காக இக்கூட்டத்தில் நிச்சயம் கலந்து கொள்வேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள தமக்கு முதலில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பின்னர் அந்த அழைப்பு மீட்டுக் கொள்ளப்பட்டதாக அமிருடின் நேற்று கூறியிருந்தார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2021/01/MB_PM-PSX_20210119_191035-960x640.jpg)