ஷா ஆலம், ஜூன் 17-நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உதவும் நோக்கில் எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் 150,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
மளிகைப் பொருள்களை வாங்குவதற்கு ஐம்பது வெள்ளிக்கான பற்றுச்சீட்டுகளை வழங்கக்கூடிய இத்திட்டத்தின் வழி சுமார் மூவாயிரம் குடும்பங்கள் பயன்பெற முடியும் என்று எம்.பி.ஐ. நிறுவன சமூக கடப்பாட்டு பிரிவின் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.
நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு மளிகைப் பொருள்களுக்கான பற்றுச்சீட்டுகளை வழங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். கே.கே. மார்ட் நிறுவனத்துடன் இணைந்து திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.
இத்திட்டத்தில் பங்கு பெறத் தகுதி உள்ளவர்களின் பட்டியல் ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடமிருந்து பெறப்படும். அவர்கள்தான் தங்கள் வட்டார மக்களின் நிலை குறித்து நன்கு அறிந்துள்ளனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு ஊராட்சி மன்ற உறுப்பினருக்கும் ஐம்பது பற்றுச்சீட்டுகளை வழங்கவுள்ளோம். இதன் வழி 60 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்கள் வட்டாரத்திலுள்ள மக்களுக்கு அதனை பகிர்ந்தளிப்பர் என அவர் சொன்னார்.