போக்குவரத்து குற்ற சம்மன்களுக்கு 50 விழுக்காட்டு கழிவு- நாளை முதல் அமல்
கோலாலம்பூர், ஜூன் 17– சாலைப் போக்குவரத்து குற்றங்கள் தொடர்பான சம்மன்களுக்கு அரச மலேசிய போலீஸ் படை 50 விழுக்காடு வரை கழிவு வழங்குகிறது. இந்த சலுகை நாளை தொடங்கி அடுத்த மாதம் 18ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட்ட சாலைக் குற்றங்கள், இவ்வாண்டில் புரியப்பட்ட முதன்மையான குற்றங்கள், கனரக வானங்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் எக்சோஸ் எனப்படும் வாகனப் புகைப்போக்கியை மாற்றியமைத்தது தொடர்பான குற்றங்களுக்கு இந்த சலுகை வழங்கப்படாது என்று புக்கிட் அமான் சாலைப் போக்குவரத்து குற்றங்கள் மற்றும் அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்தோ அஜிஸ்மான் அலியாஸ் கூறினார்.
குற்றப்பதிவைக் கொண்டவர்கள் அரச மலேசிய போலீஸ் படையின் அதிகாரத்துவ அகப்பக்கம் வாயிலாகவும் மைபாயார் சமான் செயலி வாயிலாகவும் அபராதத் தொகையை செலுத்தலாம் என அவர் சொன்னார்.
கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டிருக்கும் மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக மாநில மற்றும் மாவட்ட போலீஸ் தலைமையங்களில் உள்ள சம்மன்களைச் செலுத்தும் முகப்பிடங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.