ஷா ஆலம், ஜூன் 27- சிலாங்கூரில் எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மாநில அரசு வழங்கிய 50,000 வெள்ளி கூடுதல் ஒதுக்கீடு சிரமத்தில் உள்ளவர்களுக்கு உதவுவதற்கு பெரிதும் துணை புரிகிறது.
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிடின் ஷாரி வெளியிட்ட கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பில் இடம் பெற்றுள்ள இந்த கூடுதல் ஒதுக்கீடு, மக்களுக்கு உதவிகளை நல்குவதில் மாநில அரசு அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுவதை புலப்படுத்துவதாக உள்ளது என்று மாநில எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ரிஸாம் இஸ்மாயில் கூறினார்.
இந்த ஒத்துழைப்பு எதிர்காலத்திலும் நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம். நோய்த் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் மக்கள் நலன் கருதி அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட முடியும் என நம்புகிறோம் என்றார் அவர்.
நோய்த் தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் ஆயிரம் வெள்ளியை உதவித் தொகையாக வழங்கும்படி மாநில அரசை அவர் கேட்டுக் கொண்டார்.
கடந்த 9ஆம் தேதி மந்திரி புசார் வெளியிட்ட கித்தா சிலாங்கூர் 2.0 திட்டத்தில் மக்கள் பரிவுத் திட்டத்தின் கீழ் எதிர்க்கட்சிகள் உள்பட மாநிலத்திலுள்ள அனைத்து 56 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மானியத் தொகை ஒரு லட்சம் வெள்ளியாக உயர்த்தப்பட்டது.