ஷாஆலம், ஜூலை 2– பல்வேறு துறைகளை சேர்ந்த அமலாக்க அதிகாரிகளின் பங்கேற்புடன் “ஒப்ஸ் பாத்தோ“ சோதனை நடவடிக்கை இன்று தொடங்கி மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப்படவுள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை பொதுமக்களும் வணிக நிறுவனங்களும் கடைபிடிப்பதை உறுதி செய்ய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறினார்.
நோய்த் தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் செயல்படும் தொழிற்சாலைகள், உணவகங்கள், விநியோக நிறுவனங்கள் ஆகியவற்றை இலக்காக கொண்டு இச்சோதனை நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.
அனைத்து 23 அமைச்சுகள், இலாகாகக்கள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் கோவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான எஸ்.ஒ.பி. அமலாக்க ஒருங்கிணைப்பு குழு நடத்திய சந்திப்பில் இம்முடிவு எடுக்கப்பட்டடதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சோதனை நடவடிக்கை மிகக் கடுமையானதாகவும் ஒருங்கிணைந்ததாகவும் இருக்கும். இதில் ஹெலிகாப்டர்கள், டிரோன்கள் பயன்படுத்தப்படுவதோடு சாலைத் தடுப்புகளும் அதிகரிக்கப்படும் என்றார் அவர்.
ஓப்ஸ் பாத்தோ நடவடிக்கையின் கீழ் கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் நேற்று வரை தொழிற்சாலைகள், தொழிலாளர் தங்கும் விடுதிகள், வர்த்தக மையங்களை உள்ளடக்கிய 126,207 இடங்கள் மீது சோதனை மேற்கொள்ளப் பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.