கோலாலம்பூர், ஜூலை 4- நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட “ஓப்ஸ் பாத்தோ“ சோதனை நடவடிக்கையின் போது தேசிய மீட்சித் திட்டத்திற்கான முதல் கட்ட அமலாக்க எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 213 தொழிற்சாலைகள் மற்றும் வணிக மையங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அந்த ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையின் போது 19,000 தொழிற்சாலைகள் மற்றும் வணிக மையங்கள் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுன் கூறினார்.
இந்த சோதனை நடவடிக்கையில் அரச மலேசிய போலீஸ் படையின் தலைமையில் பல்வேறு அமலாக்க நிறுவனங்களைச் சேர்ந்த 26,504 உறுப்பினர்கள் பங்கேற்றதாக அவர் சொன்னார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் செயல்படுவதற்கு அனுமதி பெற்றுள்ள போலும் பல நிறுவனங்கள் செயல்படாமல் இருப்பது எங்களின் சோதனையில் தெரியவந்தது. அத்தகைய நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு இந்த சந்தேகத்திற்குரிய இச்செயல் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்றார் அவர்.
இந்நிறுவனங்கள் நாங்கள் சோதனை மேற்கொள்ளும் போது நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து மற்ற தினங்களில் செயல்படுவதற்குரிய வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
பல தொழிற்சாலைகள் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக எஸ்.ஒ.பி. விதிமுறைகளைப் கடைபிடிப்பதில் சிறப்பாக செயல்பட்டதை இச்சோதனை நடவடிக்கையில் தாங்கள் கண்டறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.