ஷா ஆலம், ஜூலை, 5– கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நீண்ட கால பொருளாதார வளர்ச்சித் திட்டத்தை அடுத்தாண்டில் வரைய சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது.
வரும் 2022 ஆம் ஆண்டிற்கான அனைத்து உத்தேச செலவினங்களையும் மாநில அரசு ஆராய்ந்து வருவாகவும் இவ்வாண்டு இறுதியில் இதன் தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் சிலாங்கூர் அரசு வருடாந்திர வரவு செலவுத் திட்டம் நீங்கலாக ஐந்து பொருளாதார மீட்சித் திட்டங்களை அறிவித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் சமீபத்தில் வெற்றியை நோக்கி இணைந்து செல்வோம் எனும் கருப்பொருளில் கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பை மாநில அரசு அறிவித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுமார் 5 கோடியே 51 லட்சத்து 56 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான இந்த உதவித் தொகுப்பின் வாயிலாக குறைந்தது 16 லட்சம் சிலாங்கூர்வாசிகள் பயன்பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டது.