சுபாங், ஜூலை 5- தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்திற்கு உதவும் வகையில் அமெரிக்க அரசாங்கம் வழங்கிய 10 லட்சம் பைசர் கோவிட்-10 தடுப்பூசி மலேசியா வந்தடைந்தது.
அந்த தடுப்பூசியை ஏற்றியிருந்த ராயா ஏர்வேய்ஸ் சரக்கு விமான நிறுவனத்தின் டி.எச். 384 விமானம் இன்று காலை 8.10 மணியளவில் சுபாங், சுல்தான் அப்துல் அஜிஸ் விமான நிலையம் வந்து சேர்ந்தது.
இந்த விமானத்தை வரவேற்பதற்காக தேசிய கோவிட்-19 தடுப்புசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சரும் அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கதுறை அமைச்சருமான கைரி ஜமாலுடின், வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹசேன், மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதர் பிராயன் மேக்பீட்டர்ஸ் ஆகியோர் விமான நிலையம் வந்திருந்தனர்.
சின்சினாத்தி/ நோர்தன் கெண்டக்கி அனைத்துலக விமான நிலையத்திலிருந்து கடந்த 2 ஆம் தேதி புறப்பட்ட அவ்விமானம் காலை 7.00 மணிக்கு சிங்கப்பூர் வந்து பின்னர் கோலாலம்பூர் திரும்பியது.
மலேசியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான நட்புறவை பிரதிபலிக்கும் வகையில் இந்த தடுப்பூசி விநியோகம் அமைந்துள்ளதாக மெக்பீட்டர்ஸ் கூறினார்.