ஷா ஆலம், ஜூலை 12– கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக இறந்தவர்களின் வாரிசுகள் சிலாங்கூர் அரசின் 1,000 வெள்ளி உதவித் தொகைக்கு இன்று தொடங்கி வரும் ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.
கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த நிதியுதவிக்கு https://www.selangorprihatin.com எனும் அகப்பக்கத்தின் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என்று சுகாகாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
பெறப்படும் தகவல்கள் முறையாக இருக்கும் பட்சத்தில் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்ட 14 வேலை தினங்களுக்குள் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்கில் அந்த உதவித் தொகை சேர்க்கப்படும் என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
இந்த உதவித் தொகை திட்டத்திற்கு 15 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், சுமார் 1,500 குடும்பங்களுக்கு இதன் மூலம் நிதியுதவி வழங்க முடியும் என்றார்.
இந்த நிதியுதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கான நிபந்தனைகள் வருமாறு-
– மலேசியா பிரஜையாக இருக்க வேண்டும்
– விண்ணப்பதாரர் (நெருங்கிய வாரிசு) மற்றும் இறந்தவர் சிலாங்கூரில் பிறந்து சிலாங்கூரில் வசித்தவராக அல்லது பத்து ஆண்டுகளுக்கும் மேல் சிலாங்கூரை இருப்பிடமாக கொண்டவராக இருத்தல் அவசியம்.
– கோவிட்-19 நோய்த் தொற்றினால்தான் சம்பந்தப்பட்டவர் இறந்தார் என்பதை மருத்துவமனை/ சுகாதா கிளினிக் அல்லது பதிவு பெற்ற மருத்துவ மையம் இறப்பு பத்திரத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.
– சிலாங்கூரில் இறந்திருக்க வேண்டும்.
-2021 ஆம் ஆண்டிற்கு பின்னர் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு மட்டுமே நிதியதவி வழங்கப்படும்
– ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்படும்.
மேல் விபரங்களுக்கு 1-800-22-6600 என்ற 24 மணி நேர சிறப்பு தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.