ஷா ஆலம், ஜூலை 25- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெறுவதற்கு பத்து தீகா தொகுதியில் சுமார் 4,000 பேர் பதிவு செய்துள்ளனர். இம்மாதம் 7 ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்படும் இந்த தடுப்பூசி பதிவு இயக்கத்தில் இந்த எண்ணிக்கை பதிவானதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார். எனினும், அவர்களில் 2,500 பேருக்கு மட்டுமே இங்குள்ள செக்சன் 19, டி பல்மா ஹோட்டலில் முதலாவது டோஸ் தடுப்பூசியை பெறுவதற்கான தேதி வழங்கப்படும் என்று அவர் சொன்னார். இந்த தடுப்பூசி திட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், சிறு வணிகர்கள், மார்க்கெட் பணியாளர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார். இந்த தடுப்பூசி திட்டத்திற்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்று நாங்கள் எதிர் பார்க்கவில்லை. இருந்த போதிலும் உண்மையில் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தில் வாய்ப்பளிக்க விரும்புகிறோம். இது தவிர, தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கு அருகில் வசிப்பவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றார் அவர். மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கிய செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்திற்கு சிலாங்கூர் அரசு 500,000 தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் 250,000 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாக பெற முடியும்.