ஷா ஆலம், ஜூலை 31– நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வறட்சி நிலையைக் கருத்தில் கொண்டு திறந்த வெளிகளில் தீயிடல் நடவடிக்கைகளை மேற்ற்கொள்வதை தவிர்க்கும் படி பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தீச்சம்பவங்களை காணும் பட்சத்தில் அது குறித்து உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தகவல் தருமாறு சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் ஹபிஷாம் முகமது நோர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
தீச்சம்பவங்கள் சிறிதாக இருந்தாலும் அவை பெரிதாகி பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்கு ஏதுவாக உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிப்பது அவசியம் என்று அவர் கூறினார்.
தென் மேற்கு பருவக் காற்றின் காரணமாக நாட்டில் கடுமையான உஷ்ண நிலை நிலவி வருவதோடு இந்நிலை வரும் செப்டம்பர் மாதம் மத்திய பகுதி வரை நீடிக்கும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியுள்ளது.
இத்தகைய வறட்சி காலங்களில் அடிக்கடி தீச்சம்பவங்கள் ஏற்படும் சாத்தியம் உள்ள தென் உலு லங்காட் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி, வட உலு லங்காட் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி மற்றும் கிள்ளான், ஜொஹான் செத்தியா ஆகிய பகுதிகளில் தமது தரப்பு தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக ஹபிஷாம் தெரிவித்தார்.
விவசாய பகுதியாக விளங்கும் ஜோஹான் செத்தியா பகுதியில் கடந்த புதன் கிழமை தொடங்கி தீயை அணைக்கும் பணியில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறிய அவர், ஒவ்வோராண்டும் வறட்சி காலத்தின் போது இப்பகுதியில் தீயை அணைப்பது வழக்கமான பணியாகி விட்டது என்றார்.