ஷா ஆலம், ஆக 8- ஐ.டி.சி.சி.மாநாட்டு மையத்தில் உள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்தில் வருகைக்கான முன்பதிவின்றி வந்தவர்களுக்கு கடந்த திங்கட்கிழமை தொடங்கி இதுவரை 3,600 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இந்த மையத்தில் முன்பதிவின்றி வருவோருக்காக தினசரி 600 தடுப்பூசிகள் ஒதுக்கப்படுவதாக கோவிட்-19 தடுப்பூசி பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அடி பைசால் அகமது தர்மிஸி கூறினார். தற்போது நேரடியாக தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பு 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டாலும் மூத்த குடிமக்களுக்கும் இங்கு தொடர்ந்து தடுப்பூசி வழங்கப்படுகிறது என்றார் அவர். தடுப்பூசி தீர்ந்து விடும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவாத அட்டை வழங்கப்பட்டு மறுநாள் அவர்கள் தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ளவர்கள் நேரடியாக தடுப்பூசி பெறுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஐ.டி.சி.சி. மையம் உள்பட ஒன்பது தடுப்பூசி மையங்களின் பட்டியலை கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு பணிக் குழு இம்மாதம் முதல் தேதி வெளியிட்டது.