ஷா ஆலம், ஆக 16- “ரைட்“ எனப்படும் ரோடா டாருள் ஏசான் திட்டத்தின் வழி உணவுப் பட்டுவாடா தொழிலில் ஈடுபட்டுள்ள 600க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு 343,080 வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக பெட்டாலிங், கோல சிலாங்கூர், உலு சிலாங்கூர், சபாக் பெர்ணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு தலா 500 வெள்ளி வழங்கப்பட்டதாக இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் கூறினார்.
ஃபூட் பாண்டா, கிராப் ஃபூட், லாலாமூவ், மெக்டோனால்ட், மிஸ்டர் ஸ்பீடி, புங்குசிட் மற்றும் சிலாங்கூர் அரசின் இணைய பொருள் விநியோக அமைப்பான செல்டேக் போன்ற நிறுவனங்கள் வாயிலாக உணவுப் பொருள் விநியோகப் பணியில் இளைஞர்கள் ஈடுபடுவதை தாங்கள் பெரிதும் வரவேற்பதாக அவர் சொன்னார்.
இத்தகைய இணைய உணவு விநியோக நடவடிக்கைகள் பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டும் அதேவேளையில் பெரும்பாலான இளைஞர்களின் தொழில் அடையாளமாகவும் இது அமைந்து விட்டது என்றார் அவர்.
இங்குள்ள செக்சன் யு19, எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில் நடைபெற்ற ரைட் பங்கேற்பாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த ரைட் திட்டத்திற்கு கடந்தாண்டில் 3,000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதாக கூறிய அவர், மாநிலத்திலுள்ள இதர ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கூடிய விரைவில் இந்த நிதி பகிர்ந்தளிக்கப்படும் என்றார்.
இவ்வாண்டில் இந்த ரைட் திட்டம் சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றத்துடன் இணைந்து 20 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டுடன் தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.