ஷா ஆலம், ஆக 26- இவ்வாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை 191 குடும்ப வன்முறை தொடர்பான புகார்கள் சிலாங்கூரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
பெட்டாலிங் மாவட்டத்தில் மிக அதிகமாக அதாவது 69 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை பதிவுகள் காட்டுவதாக அவர் சொன்னார்.
பெட்டாலிங் மாவட்டத்திற்கு அடுத்து உலு லங்காட் (38), கோம்பாக் (28), கிள்ளான் (16), சிப்பாங் (15), கோல லங்காட் (14), கோல சிலாங்கூர் (6), உலு சிலாங்கூர் (3), சபாக் பெர்ணம் (2) ஆகிய மாவட்டங்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய துன்புறுத்தல் சம்பவங்களைக் கையாள்வதில் போலீஸ் மற்றும் சமூக நல இலாகாவிடம் உள்ளதைப் போல் ஜாயிஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய சமய இலாகாவிடம் அதிகாரம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
திருமணம் மற்றும் கணவன் மனைவி, பிள்ளைகளின் உரிமை தொடர்பான விவகாரங்களில் மட்டுமே ஜாயிஸ் அதிகாரத்தை கொண்டுள்ளதாக மாநில சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
உடல் மற்றும் மனோரீதியிலான துன்புறுத்தல் தொடர்பில் லெம்பா ஜெயா உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு சமய விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி சார்பில் பதிலளித்த போது அவர் இவ்வாறு சொன்னார்.