ஜோஜ் டவுன், ஆக 27- சுமார் இரண்டு லட்சம் கோவிட்-19 தடுப்பூசிகளை தங்களுக்கு இரவலாக வழங்குவதற்கு சிலாங்கூர் அரசு முன்வந்துள்ளதாக பினாங்கு மாநில அரசு நன்றி கூறியுள்ளது.
மாநிலத்தில் இன்னும் தடுப்பூசி பெறாதவர்களை மையமாக கொண்டு தடுப்பூசி இயக்கத்தை விரைந்து மேற்கொள்வதற்கு இந்த தடுப்பூசி விநியோகம் துணை புரியும் என்று பினாங்கு மாநில சுகாதார, விவசாய, விவசாய அடிப்படை பொருள் மற்றும் புறநகர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் நோர் லீலா அரிபின் கூறினார்.
இந்த தடுப்பூசிகளை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கிய சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் மற்றும் கிளினிக் செல்கேர் நிர்வாகத்தினருக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.
வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் பினாங்கிலுள்ள அனைத்து மக்களும் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றிருப்பர் என்றும் அவர் தெரிவித்தார்.
பினாங்கில் இதுவரை 225,226 பேர் இன்னும் தங்களின் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெறவில்லை எனக் கூறிய அவர், அவர்களில் பெரும்பாலோர் செபராங் பிறை தெங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர் என்றார்.