ஷா ஆலம், செப் 7- மாரா இளநிலை அறிவியல் கல்லூரியில் (எம்.ஆர்.எஸ்.எம்.) நுழைவதற்கான நிபந்தனைகளை அரசாங்கம் தொடர்ந்து நிலை நிறுத்தியுள்ளதை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர்.
அரசாங்கத்தின் இந்த முடிவை தாங்கள் வரவேற்பதாக சிலாங்கூர் மாநில ஒருங்கிணைந்த சமய ஆரம்ப பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டமைப்பு கூறியது.
பொது மக்களின் நலனில் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளதை இந்த முடிவு காட்டுவதாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
எம்.ஆர்.எஸ்.எம் கல்லூரியில் தங்கள் பிள்ளைகள் பயில வேண்டும் என்ற கனவில் உள்ள பெற்றோர்களுக்கு கல்வியமைச்சரின் அறிவிப்பு பெரும் மனநிம்மதியை ஏற்படுத்தியுள்ளதாக அது தெரிவித்தது.
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் ”மலேசிய குடும்பம்” என்ற சுலோகத்திற்கேற்ப எம்.ஆர்.எஸ்.எம். கல்லூரிகளில் அனைத்து மொழி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளும் கொள்கை தொடர்ந்து நிலை நிறுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
தேசிய பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மட்டுமே இங்கு பயில வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வியமைச்சு முன்னதாக அறித்திருந்தது. இதனால், தமிழ், சீன மற்றும் சமயப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அந்த கல்லூரிகளில் சேர்ந்து பயில முடியாத சூழல் ஏற்பட்டது.