ECONOMYSELANGOR

தாமான் ஆலம் சூரியாவில் 170 சிலாங்கூர் கூ வீடுகள் விற்று முடிந்தன

கோல சிலாங்கூர் செப் 10- இங்குள்ள தாமான் ஆலம் சூரியாவில் 170 சிலாங்கூர் கூ வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்கப்பட்டுவிட்டன.

அந்த ஒற்றை மாடி வரிசை வீடுகளுக்கு அபரிமித வரவேற்பு கிடைத்துள்ளதோடு இதனை வாங்க 1,300 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக வீடமைப்பு மற்றும் நகர்ப்பு நல்வாழ்வுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

தரை வீடுகளுக்கான வரவேற்பு அதிகமாக உள்ளதை இது காட்டுகிறது. இத்தகைய வீடுகளை அதிகளவில் கட்டுவதற்கு ஏதுவாக பொருத்தமான இடங்களை அடையாளம் காணும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.

பி40 மற்றும் எம்40 பிரிவினருக்கான கட்டுபடி விலையிலான வீடுகளை நிர்மாணிக்கும்  மாநில அரசின் முயற்சிக்கு மேம்பாட்டு நிறுவனமான ஐ.ஜே.எம். லேண்ட் உறுதுணையாக உள்ளது இத்திட்டத்தின் வழி நிரூபணமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தாமான் ஆலம் சூரியா குடியிருப்புத் திட்டத்தில் வீடு வாங்கியோரிடம் சாவிகளை ஒப்படைக்கும் நிகழ்வில் ரோட்சியா இவ்வாறு கூறினார். ஐ.ஜே.எம். லேண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டத்தோ ஹூம கிம் சீயும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

மொத்தம் 900 சதுர அடி பரப்பளவிலான இந்த டி பிரிவு வீடுகள் 250,000 வெள்ளி விலையில் விற்கப்படுகின்றன. இந்த வீடமைப்புத் திட்டம் 5.08 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டது.

 


Pengarang :