ஷா ஆலம் செப் 12- சிலாங்கூர் மாநில அரசு அமல்படுத்தியுள்ள நடமாடும் தடுப்பூசி இயக்கத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திட்டம் தங்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதாக பொதுமக்கள் மட்டுமின்றி அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கும் முதலாளிகளும் கூறினர்.
தனது இரு வீட்டு பணிப்பெண்களுக்கு தடுப்பூசி பெற மைசெஜாத்ரா செயலி வாயிலாக தாம் கடந்த ஜூன் மாதம் பதிவு செய்த போதிலும் இதுவரை அழைப்பு கிடைக்கவில்லை என்று அமிரா ஜூல்கிப்ளி ((வயது 29) கூறினார். அதிர்ஷ்டவசமாக மாநில அரசின் இந்த நடமாடும் தடுப்பூசி இயக்கம் அப்பணிப் பெண்களுக்கு தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது என்று அவர் தெரிவித்தார்.
மேரு, பாசார் புசார் மையத்தில் நேற்று நடைபெற்ற நடமாடும் தடுப்பூசி இயக்கத்தின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதனிடையே, இந்த நடமாடும் தடுப்பூசி இயக்கத்தின் வாயிலாக தடுப்பூசியை பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக இந்தியாவைச் சேர்ந்த தொழிற்சாலை ஊழியரான குர்டேவ் சிங் சொன்னார்.
முன்பு தடுப்பூசி பெறாத காரணத்தால் வெளியே செல்வதற்கு அஞ்சினேன். இப்போது தடுப்பூசி பெற்று விட்டதால் தைரியமாக வெளியில் சென்று வரமுடியும் என்பதோடு வேலைக்கும் செல்ல இயலும் என்றார் அவர்.