ஷா ஆலம், செப் 27- நேற்று மாலை பல மணி நேரத்திற்கு நீடித்த கனத்த மழை காரணமாக ஷா ஆலம் வட்டாரத்தின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
மாலை 3.00 மணி தொடங்கி பெய்த அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் குறிப்பாக செக்சன் 13இல் கடுமையான வெள்ளம் ஏற்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோர்ஹஸாம் காமிஸ் கூறினார்.
சில பகுதிகளில் நான்கு அடி வரை வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பல வாகனங்கள் நகர முடியாத நிலையில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டன. எனினும், தற்போது வெள்ளம் சற்று வடிந்து நிலைமை சீரடையத் தொடங்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தனது தொகுதியின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் தெரிவித்தார். பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, வெள்ளம் காரணமாக புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலையிலிருந்து ஷா ஆலம் டோல் சாவடி செல்லும் சாலையின் ஒரு தடம் மட்டுமே வாகன போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளதாக புரோ லிந்தாஸ் நிறுவனம் டிவிட்டர் பதிவின் வழி தெரிவித்தது.
இது தவிர, செக்சன் 9, செக்சன் 10, செக்சன் 7, செக்சன் 7 உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பான புகைப்படங்களை பொதுமக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டனர்.