லங்காவி, செப் 27– கோவிட்-19 கோவிட்-19 தடுப்பூசியை நிராகரிக்கும் ஆசிரியர்களால் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளில் பாதிப்பு எற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்படுவார்கள்.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஆராயப்படும் பல்வேறு அணுகுமுறைகளில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதும் அடங்கும் என்று கல்வி மூத்த அமைச்சர் டத்தோ டாக்டர் ரட்ஸி ஜிடின் கூறினார்.
தடுப்பூசி பெறாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமாக்கப்பட்டாலும் வகுப்புகளில் மாணவர்களுக்கு நேரடியாக பாடம் நடத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று முன்னதாக கூறப்பட்டிருந்தது.
மாறாக, அவர்களுக்கு சிறப்பு இடம் ஒதுக்கப்பட்டு வேறு பணிகள் வழங்கப்படுவதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது என்று ரட்ஸி சொன்னார்.
இப்பிரச்னை நீண்ட காலத்திற்கு நீடிப்பதை அனுமதிக்க முடியாது எனக் கூறிய அவர், இதற்கு தீர்வு காணும் வகையில் இடமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.
இதற்கு முன்னர், தடுப்பூசி பெறாத ஆசிரியர்களுக்கு ஆலோசக சேவை வழங்கப்பட்டதோடு அவர்கள் தடுப்பூசி பெறுவதற்கு போதுமான கால அவகாசமும் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தொடக்கத்தில் 2,500 ஆக இருந்த தடுப்பூசி பெற மறுத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை தற்போது 2,000 ஆக குறைந்துள்ளது. தோற்றத்தில் இது சிறிய எண்ணிக்கையாக இருந்தாலும் இதனை தொடர அனுமதிக்க முடியாது என்பதோடு இதற்கு உடனடியாக முற்றுப் புள்ளி வைத்தாக வேண்டும் என்றார் அவர்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் பொதுச் சேவைத் துறையின் முடிவுக்காக தமது அமைச்சு காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.