புத்ரா ஜெயா, செப் 28- மாநில எல்லைகளைக் கடப்பதற்கான அனுமதி வரும் அக்டோபர் மாதம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டிலுள்ள 90 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்று விட்டனர் என்பதை உறுதி செய்யும் தரவுகளின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்படும் என்று தேசிய மீட்சி மன்றத்தின் (என்.ஆர்.சி.) தலைவர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார்.
அக்டோபர் மாத தொடக்கத்தில் அல்லது மத்தியப் பகுதியில் இந்த அனுமதி வழங்கப்படலாம். அப்போது நீங்கள் சுதந்திரமாக பயணிக்கலாம். ஆனால், எஸ்.ஒ.பி. எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மறவாமல் கடைபிடிக்க வேண்டும் என்றார் அவர்.
நேற்று இங்கு தேசிய மீட்சி மன்றத்தின் கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் எல்லைகளைத் திறப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புடன் இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
மாவட்ட மற்றும் மாநில எல்லைகளைக் கடப்பதற்கு அனுமதி வழங்கியப் பின்னர் நாட்டின் மீட்சித் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக நாட்டின் எல்லைகளையும் திறப்பது அவசியமாகும் என்றார் அவர்.