கோலாலம்பூர், செப் 28- எழுபது வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்களின் வாகனமோட்டும் லைசென்சை திரும்ப ஒப்படைக்க வேண்டும் போக்குவரத்து அமைச்சு ஒரு போதும் உத்தரவிடவில்லை என அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறினார்,
சாலை விபத்துக்கள் நிகழ்வதற்கு வயது காரணமல்ல. மாறாக இதர பல்வேறு அம்சங்கள் விபத்துக்களுக்கு வழிகோலுகின்றன என்று அவர் சொன்னார்.
வாகனமோட்டும் திறன் வயதைப் பொறுத்து அமைவதில்லை எனக் கூறிய அவர், இத்தகைய தடையை விதிப்பது அமைச்சின் நிலைப்பாடு அல்ல என்பதோடு இந்நோக்கத்திற்காக நடப்புச் சட்டத்தை மாற்றும் எண்ணமும் இல்லை என்றார்.
வாகனமோட்டும் திறமை என்பது வேறுபட்டது. உதாரணத்திற்கு லங்காவி உறுப்பினர் துன் டாக்டர் மகாதீர் முகமது மற்றவர்களைக் காட்டிலும் மிகவும் திறமையுடன் வாகனம் ஓட்டுகிறார் என்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது அவர் குறிப்பிட்டார்.
மது மற்றும் போதைப் பொருளை பயன்படுத்தியவர்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துகளை கையாள்வது மற்றும் மூத்த குடிமக்களுக்கான வாகனமோட்டும் அனுமதி தொடர்பான சிறப்பு நிபந்தனைகளை விதிப்பது தொடர்பில் அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து லேடாங் உறுப்பினர் சைட் இப்ராஹிம் சைட் நோ எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் டத்தோஸ்ரீ வீ இவ்வாறு சொன்னார்.
இவ்விவகாரத்தில் 70 எழுபது வயதுக்கும் மேற்பட்டவர்களிடம் அரசாங்கம் பாகுபாடு காட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.