கோலாலம்பூர், அக் 4– நாட்டில் நேற்று வரை 87.6 விழுக்காட்டு பெரியவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.
சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் வாயிலாக பகிர்ந்து கொண்ட பதிவில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் 90 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடைய இன்னும் 2.4 விழுக்காடு மட்டுமே எஞ்சியுள்ளதை இது காட்டுகிறது.
நேற்று முன்தினம் நள்ளிரவு 11.50 மணி வரை 2 கோடியே 5 லட்சத்து 13 ஆயிரத்து 168 பேர் அல்லது 87.6 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.
மேலும் 2 கோடியே 20 லட்சத்து 81 ஆயிரத்து 548 பேர் அல்லது 94.3 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான 108,826 இளையோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று நாடு முழுவதும் 206,574 பேர் தடுப்பூசியைப் பெற்றனர். அவர்களில் 96,024 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 110,550 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.
பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 4 கோடியே 43 லட்சத்து 52 ஆயிரத்து 079 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.