ஷா ஆலம், அக் 5- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக விற்க முடியாமல் தேங்கிப் போன விவசாய விளை பொருள்களை வாங்குவதற்கு சிலாங்கூர் மாநில அரசு ஏழு லட்சம் வெள்ளியைச் செலவு செய்தது.
விவசாயிகள் இழப்பை எதிர்நோக்காமலிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் மாநில அரசினால் உருவாக்கப்பட்ட சிலாங்கூர் விவசாய பரிவுத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 15 லட்சம் வெள்ளி தொகையில் இந்த ஏழு லட்சம் வெள்ளி ஒரு பகுதியாகும் என்று விவசாய அடிப்படை பொருள் தொழில் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர இஷாம் ஹஷிம் கூறினார்.
கிழங்கு, வாழைப்பழம் மற்றும் காய்கறிகளை நாங்கள் வாங்கியதோடு விற்பதற்கும் உதவி புரிந்தோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இங்குள்ள கம்போங் லொம்போங் சலையை நான்கு தடங்கள் கொண்ட சாலையாக விரிவுபடுத்தும் பணிகளை ஆய்வு செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
நீண்ட காலத்திற்கு அமலில் இருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக ஏற்பட்ட விளைபொருள் விற்பனை பிரச்னைக்கு சிலாங்கூர் பரிவு விவசாயத் திட்டத்தின் மூலம் தீர்வு காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தின் கீழ் விற்பனையாகாத விளைபொருள்களை மாநில அரசு மொத்தமாக வாங்கியதோடு விவசாயிகள் இழப்பை எதிர் நோக்காமலிருப்பதை உறுதி செய்ய அவற்றை விற்பனை செய்வதற்கும் உதவியதாக அவர் தெரிவித்தார்.