ஷா ஆலம், அக் 11- சுகாதாரப் பிரச்சனைகள் காரணமாக தடுப்பூசி பெற இயலாத 2,286
அரசாங்க உயர்கல்விக்கூட மாணவர்கள் அடிக்கடி கோவிட்-19 பரிசோதனையை
மேற்கொள்ள வேண்டும்.
கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டிருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக
அவர்கள் சுயப் பரிசோதனைக் கருவிகளைக் கொண்டு தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வர வேண்டும் என உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் நோராயினி அகமது கூறினார்.
இது தவிர, பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக அவர்கள் ஆர்.டி.- பி.சி.ஆர். சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கல்வி பாதிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்ய அம்மாணவர்களுக்கு தேவையான
உதவிகளை வழங்கும்படி உயர்கல்விக் கூடங்கள் பணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டார்.
மக்களவையில் இன்று லேடாங் உறுப்பினர் சைட் இப்ராஹிம் சைட் நோர் எழுப்பிய
கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். உயர்கல்விக் கூடங்களில் கல்வித் தவணை தொடங்கும் போது பல்கலைக்கழக வளாகங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து சைட் இப்ராஹிம் கேள்வியெழுப்பி இருந்தார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2016/03/Penyampaian-biasiswa-selangorku-2016-ASRI-2.jpg)