கோலாலம்பூர், அக் 14- குத்தகையைப் பெறுவதற்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக லபுவான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரோஸ்மான் இஸ்லி மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதி ரேசாலினா ஆயோப் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது 57 வயதான அஸ்மான் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
தன் தந்தையும் சகோதரரும் பங்குரிமை கொண்ட லபுவான் லிபர்ட்டி போர்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்திற்கு லபுவான் துறைமுகத்தின் மெர்டேக்கா கப்பல் துறையை ஏற்று நடத்தும் குத்தகையை வழங்குவதற்காக அரசாங்க நிறுவன அதிகாரி அல்லது லபுவான் துறைமுக வாரியத்தின் துணைத் தலைவர் என்ற முறையில் பதவியை துஷ்பிரயோகம் செய்ததன் மூலம் ஊழல் புரிந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மாலை 2.30 மணிக்கும் மாலை 5.30 மணிக்கும் இடையே புத்ரா ஜெயாவிலுள்ள போக்குவரத்து அமைச்சின் அலுவலகத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அஸ்மானுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கூடுதல் பட்சம் இருபதாண்டுச் சிறைத்தண்டனை அல்லது லஞ்சத் தொகையை விட ஐந்து மடங்கு அதிகத் தொகை அல்லது 10,000 வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் 2009 ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு ஆணையத்தின் 23(1) பிரிவு மற்றும் அதே பிரிவின் கீழ் தண்டனை விதிக்க வகை செய்யும் பிரிவு 24)1) இன் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.