அம்பாங், அக் 25– அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாபவளி பண்டிகையை முன்னிட்டு இங்குள்ள அம்பாங் சம்போரான், ஜாலான் ஈக்கான் இமாசில் உள்ள இந்திய குடும்பங்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
இந்தியர்களின் பாரம்பரிய பலகாரங்களான முறுக்கு போன்றவற்றை தயாரிக்கப் பயன்படும் மாவு வகைகளை உள்ளிட்ட பொருள்ளை அந்தப் பொட்டலங்கள் கொண்டிருப்பதாக அம்பாங் தொகுதிக்கான ஒருங்கிணைப்பாளர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
நாங்கள் வழங்கிய அந்த உணவுப் பொட்டலங்களில் அவ்வளவு விலையுயர்ந்த பொருள்கள் இல்லாவிட்டாலும் அதனை வாங்கும் மக்களின் முகத்தில் காணப்பட்ட பெருமிதம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்று ரோட்சியா சொன்னார்.
நாங்கள் வழங்கிய பொருள்களை விட அந்த மக்கள் வெளிப்படுத்திய மகிழ்ச்சி விலை மதிப்பற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்த அப்பகுதியில் வீடு வீடாக ரோட்சியா மேற்கொண்ட வருகையின் போது நகராண்மைக் கழக உறுப்பினர் ஏ. ரகுநாதன் மற்றும் குடியிருப்பாளர் நடவடிக்கை குழுவின் உறுப்பினர்களும்ம் உடனிருந்தனர்.
நாட்டில் இன மற்றும் சமய இடைவெளியைக் குறைப்பதற்கு ஏதுவாக ஒவ்வொரு சமய பண்டிகையின் போதும் இத்தகைய நிகழ்வுகள் நடத்தப்படுவது அவசியம் என்றும் ரோட்சியா வலியுறுத்தினார்.