HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 94.8 விழுக்காடாக உயர்ந்தது

கோலாலம்பூர், அக் 27- நாட்டில் 94.8 விழுக்காட்டு பெரியவர்கள் அல்லது 2 கோடியே 21 லட்சத்து 91 ஆயிரத்து 734 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

நேற்று இரவு 11.59 மணி வரை இந்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

மேலும் 97.5 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 28 லட்சத்து 30 ஆயிரத்து 806 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக அது தெரிவித்தது.

நாட்டில் நேற்று 181,160 பேர் தடுப்பூசியைப் பெற்றனர். அவர்களில் 136,290 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் மேலும் 22,178 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இதன் வழி பிக் எனப்படும்  தேசிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 4 கோடியே 94 லட்சத்து 34 ஆயிரத்து 613 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 58.8 விழுக்காட்டினர் அதாவது 18 லட்சத்து 51 ஆயிரத்து 24 பேர் முழுமையாகத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். மேலும் 82 விழுக்காட்டினர் அல்லது 25 லட்சத்து 81 ஆயிரத்து 280 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

நேற்று நாடு முழுவதும் 22,692 பேருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது, இதன் வழி இத்தடுப்பூசி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 146,469 ஆக அதிகரித்துள்ளது.


Pengarang :