HEALTHMEDIA STATEMENTNATIONAL

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஆறு இடாமான் வீடமைப்புத் திட்டங்கள்

ஷா ஆலம், அக் 27- சிலாங்கூரில் வேலை செய்வோர் மற்றும் தங்கியிருப்போர் தங்களின் முதல் வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளும் வகையில் ஆறு ரூமா இடாமான் வீடமைப்புத் திட்டங்களை  மாநில அரசு உருவாக்கவுள்ளது.

இந்த வீடுகள்  பண்டார் சவுஜானா புத்ரா, ஷா ஆலம், பூச்சோங், சைபர் சவுத், பண்டார் புஞ்சாக் ஆலம் போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் உருவாக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

ஆயிரம் சதுரஅடி பரப்பளவைக் கொண்ட இந்த வீடுகள் 250,000 வெள்ளி விலையில் விற்கப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த வீடுகள் மூன்று  அறைகள், இரண்டு குளியறைகள், இரு கார் நிறுத்துமிடங்கள், தொலைக்காட்சி, குளிர்பதனப் பெட்டி மற்றும் அலமாரி ஆகிய வசதிகளைக் கொண்டிருக்கும் என்றார் அவர்.

நெடுஞ்சாலை, மருத்துவமனை, பள்ளி, பல்கலைக்கழகம் மற்றும் பொது போக்குவரத்து வசதிகள் உள்ள இடங்களுக்கு அருகில் அமைக்கப்படும் இந்த வீடுகள் சௌகர்யத்தையும் மதிப்பையும் கூட்டும் வகையில் அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மக்கள் பொருள் பொதிந்த வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த  ரூமா இடாமான் வீடமைப்புத் திட்டம் வாய்ப்பினை வழங்கும் என்று இத்திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட போது அவர் தெரிவித்தார்.

அந்த ஆறு திட்டங்களில் பண்டார் சவுஜானா புத்ரா திட்டம் இவ்வாண்டு நவம்பர் மாதம் தொடங்கி வரும் 2024 ஆம் ஆண்டில் முற்றுப் பெறும் என அவர் மேலும் கூறினார்.

ரூமா இடாமான் வீடமைப்புத் திட்டம் தொடர்பான தகவல்களைப் பெற விரும்புவோர் www.platselangor.com என்ற அகப்பக்கத்தை நாடலாம்.


Pengarang :