ஷா ஆலம், அக் 31- கோவிட்-19 நோய்த் தொற்றைக் களைவதில் அனைவரும் ஒன்றுபட்டு தங்கள் கடமையை ஆற்ற வேண்டும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறியுள்ளார்.
எஸ்.ஒ.பி. எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிப்பதில் காட்டும் அலட்சியம் காரணமாக மறுபடியும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்படும் சூழல் ஏற்படுவதைக் காண தாம் விரும்பவில்லை என அவர் சொன்னார்.
முன்பு அமல்படுத்தப்பட்டதைப் போன்ற மற்றொரு பொது முடக்கத்தை எதிர் கொள்ளும் சக்தி மக்களுக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் இயற்கை பேரிடர்களிலிருந்து சிலாங்கூரையும் நாட்டையும் காக்கும்படி இறைவனை பிரார்த்திக்கும்படி அனைத்து முஸ்லீம்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.