ஷா ஆலம், நவ 4- சிலாங்கூர் மாநில அரசின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இம்மாதம் 26 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் அந்த வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதார நடவடிக்கைகள் புத்துயிரூட்டுவதற்கான திட்டங்களும் அமல் படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அயிருடின் ஷாரி கூறினார். வேலை வாய்ப்பு நம்பிக்கையையும் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதத்தையும் வழங்குகிறது. இந்த அம்சத்தை முதன்மையாகக் கொண்டு 2022 வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் பொருளாதாரத்திற்கு புதுதுயிரூட்ட முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். இன்று கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதில் எதிர்க் கட்சி, சுயேச்சை உறுப்பினர்கள் உள்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளதாக அமிருடின் அண்மையில் கூறியிருந்தார். 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இம்மாதம் 26 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும். ஒரு வார கால விவாதத்திற்குப் பின்னர் அது ஏற்றுக்கொள்ளபடும்.