ஷா ஆலம், நவ 8- சுங்கை ராமால் சட்டமன்ற உறுப்பினர் பெக்காவானிஸ் எனப்படும் சிலாங்கூர் மகளிர் சமூக நல இயக்கத்துடன் இணைந்து கடும் நோயினால் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு உதவிகளை நல்கியுள்ளார்.
ஸியாரா மெடிக் பெக்காவானிஸ் எனும் திட்டத்தின் கீழ் கடந்த மாதம் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மஸ்வான் ஜொஹார் கூறினார்.
சுங்கை ராமால் தொகுதியிலுள்ள அந்த 20 நோயாளிகளுக்கும் மருந்துகள் வாங்குவதற்காக தலா 250 வெள்ளி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இருதய நோய், சிறுநீரக பிரச்சனை, நீரிழிவு, புற்றுநோய் மற்றும் படுத்த படுக்கையாக இருபோருக்கு இத்தகைய உதவிகள் வழங்கப்பட்டன என்று அவர் மேலும் சொன்னார்.
பெக்காவானிஸ் அமைப்பு வழங்கிய இந்த உதவி தவிர்த்து தொகுதி சேவை மையத்தின் சார்பாக உணவுக் கூடைகளும் கோவிட்-19 சுயப் பரிசோதனைக் கருவிகளும் வழங்கப்பட்டன என்றார் அவர்.
வெகு விரைவில் மேலும் பத்து நோயாளிகளைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை தாங்கள் வழங்கவுள்ளதாக அவர் கூறினார்.
ஸியாரா மெடிக் பெக்காவானிஸ் திட்டத்தின் கீழ் மாநிலத்திலுள்ள 44 தொகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு உதவிப் பொருள்கள் வழங்க பெக்காவானிஸ் அமைப்பு 220,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.