கோலாலம்பூர், நவ 10– ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இயக்கம் நாளை நாடாளுமன்ற கிளினிக்கில் நடைபெறும்.
நாளை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இந்த தடுப்பூசி இயக்கம் நடைபெறும் என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் டத்தோ முகமது ரஷிட் ஹஸ்னோன் கூறினார்.
அந்த ஊக்கத் தடுப்பூசி தொடர்பான மேல் விபரங்களைப் பெறுவதற்கும் முன்பதிவு செய்வதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற கிளினிக்கை அணுகலாம் என்று மக்களவையில் கேள்வி நேரம் தொடங்குவதற்கு முன்னர் அவர் தெரிவித்தார்.
இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றவர்களுக்கு மூன்றாவதாக ஊக்கத் தடுப்பூசி செலுத்தும் இயக்கம் கடந்த மாதம் 13 ஆம் தேதி தொடங்கப்பட்டது.