ஷா ஆலம், நவ 13- கோவிட்-19 பெருந்தொற்று மறுபடியும் உயர்வு காணாமலிருப்பதை உறுதி செய்வதற்காக சுகாதா அமைச்சு ஊக்கத் தடுப்பூசிகளைச் செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
பொது மக்களுக்கு குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு மூன்றாவது அல்லது ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற உலக சுகாகார நிறுவனத்தின் கோரிக்கைக்கேற்ப இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
கடும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், நாற்பது வயதுக்கும் மேற்பட்டவர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை உள்ளடக்கிய 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதார அமைச்சு விரிவுபடுத்தவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எத்தகைய தடுப்பூசியை செலுத்துவது என்பது ஒழுங்கு முறை அமைப்பின் அனுமதி மற்றும் சம்பந்தப்பட்ட நபருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ நிபுணரின் ஆலோசனையை பொறுத்து முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
நேற்று வரை உலகம் முழுவதும் 14 கோடியே 45 லட்சத்து 70 ஆயிரம் ஊக்கத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள வேளையில் மலேசியாவில் 825, 497 பேர் அத்தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.