கோம்பாக், டிச 5- கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் 2009 ஆம் ஆண்டில் பிறந்த சிறார்களுக்கு தாவாஸ் எனப்படும் சிலாங்கூர் பாரம்பரிய நிதியகம் 25,000 சுயப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது.
அச்சிறார்களுக்கு வழங்கப்பட்ட உபகரணங்களில் முகக்கவசம், 100 மில்லி லிட்டர் கிருமி நாசினி ஆகியவையும் அடங்கும் என்று யாவாஸ் எனப்படும் சிலாங்கூர் பாரம்பரிய மைந்தர் அறவாரியத்தின் தலைமை நிர்வாகி கான் பெய் நீய் கூறினார்.
கோவிட்-19 பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் முயற்சியாக இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதுதவிர, மாநில அரசின் ஏற்பாட்டிலும் நோய்த் தொற்றுக்கு எதிராக பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று அவர் சொன்னார்.
பத்து கேவ்ஸ், டேவான் ரக்யாட் திறந்த வெளி மண்டபத்தில் தாவாஸ் உறுப்பினர்களுக்கு பள்ளி உதவிப் பொருள்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அடுத்தாண்டில் முதலாம் ஆண்டு செல்லவிருக்கும் 2015 ஆம் ஆண்டில் பிறந்த பிள்ளைகளுக்கு இந்த உதவிப் பொருள்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வழங்கினார்.
இதுவரை சிலாங்கூரில் பிறந்த 365,920 பிள்ளைகள் இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ளதாக கூறிய பெய் நீய், இத்திட்டத்திற்கு பொதுமக்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்து வருவதாக சொன்னார்.
உறுப்பினர்களுக்கு வழஙகப்படும் பொருள்கள் தரம் வாய்ந்தவையாகவும் நடப்புத் தேவைக்கு ஏற்றதாகவும் இருப்பதை தாங்கள் தொடர்ந்து உறுதி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.