கோலாலம்பூர், டிச 7 - தேவைப்படும் நாடுகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி விநியோகம் சமமான அளவில் இருப்பதை உறுதி செய்வதற்காக வங்காளதேசத்திற்கு 559,200 அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளையும் லாவோஸுக்கு 283,400 தடுப்பூசிகளையும் நன்கொடையாக வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதுவரை, பங்களாதேஷ் மக்கள்தொகையில் 20 சதவீதமும் லாவோஸ் மக்கள் தொகையில் 24 சதவீதமும் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். இரு நாடுகளும் முறையே நேற்று 6 ஆம் தேதி மற்றும் 8 ஆம் தேதி தங்கள் விநியோகத்தைப் பெறத் தொடங்கின என்று அவர் சொன்னார். பிற நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கிய போதிலும் நாட்டில் இன்னும் பெரியவர்கள் மற்றும் இளையோருக்கான தடுப்பூசி திட்டங்களுக்கு மட்டுமின்றி ஊக்கத் தடுப்பூசித் திட்டத்திற்கும் போதுமான தடுப்பூசி கையிருப்பு உள்ளது என்றும் கைரி உறுதியளித்தார். கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கவும், சம்பந்தப்பட்ட நாடுகளில் தடுப்பூசி விகிதத்தை அதிகரிக்கவும் இரு நாடுகளின் அரசுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இந்தப் பங்களிப்பு உதவும் என்று சுகாதார அமைச்சு நம்புகிறது என்றார் அவர். விஸ்மா புத்ரா மூலம் கோவிட்-19 தடுப்பூசி செலுத்துவதில் குறைவான எண்ணிக்கையை பதிவு செய்துள்ள நாடுகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு உதவும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபடும் என்று அவர் ஒரு அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். ஜப்பான், அமெரிக்கா, சீனா மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு நாடுகளில் இருந்து மலேசியா இதற்கு முன்னர் மொத்தம் 29 லட்சத்து13 ஆயிரத்து 790 தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது என்று கைரி கூறினார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2021/02/P-fizer-Vaksin-Covid-19-960x639.jpg)