ஷா ஆலம், டிச 16- ஏ.டி.எம். எனப்படும் தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரம் வழி மேற்கொள்ளப்படும் பணபட்டுவாடாவுக்கு ஒரு வெள்ளி கட்டணம் விதிக்கும் முடிவை ரத்து செய்யும்படி வங்கிகளுக்கு அரசாங்கம் உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு குறிப்பாக அதிக வசதிகளைக் கொண்டிராத புறநகர் வாசிகளுக்கு இந்த கட்டண முறை சுமையை ஏற்படுத்தும் என்பதை மக்களவையில் விவாதத்தின் போது உறுப்பினர்கள் வெளியிட்ட கருத்துகள் புலப்படுத்துவதாக கெஅடிலான் கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசாத்தியோன் கூறினார்.
இந்த நடவடிக்கை மிகவும் தவறானது என்பதோடு மக்களை சிரமத்தில் ஆழ்த்தும் என்பது எனது கருத்தாகும். இதன் தொடர்பில் எனக்கு தனிப்பட்ட முறையில் நிறைய புகார்கள் வருவதோடு சமூக வலைத்தளங்களில் மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் என்று அவர் சொன்னார்.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்திலும் நுட்ப அடிப்படையில் ஆரோக்கியமான வளர்ச்சியை பதிவு செய்த துறைகளில் வங்கித் துறையும் ஒன்றாக விளங்குகிறது. என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் ஏ.டி.எம். இயந்திரங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் வங்கிகளுக்கிடையிலான பண பரிமாற்றத்திற்கு வர்த்தக வங்கிகள் ஒரு வெள்ளி கட்டணத்தை விதிக்கவுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.