ஷா ஆலம், டிச 17- இன்று அதிகாலை 6.00 மணி வரை ஐந்து மாவட்டங்களில் நீர் விநியோகம் 12 விழுக்காடு சீரடைந்துள்ளதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.
உலு லங்காட் மாவட்டத்தில் 77.8 விழுக்காட்டினர் நீர் விநியோகத்தைப் பெற்ற வேளையில் பெட்டாலிங் மாவட்டத்தில் 7.6 விழுக்காட்டு பகுதி மக்கள் நீர் விநியோகத்தைப் பெற்றதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
இதர மாவட்டங்களான கோல லங்காட், புத்ரா ஜெயா மற்றும் சிப்பாங்கில் நிலைமை இன்னும் சீரடையவில்லை என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.
நேற்று காலை செமினி ஆற்றில் டீசல் வாடை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையத்தில் பணிகள் நிறுத்தப்பட்டன.
இதனால் பெட்டாலிங், புத்ரா ஜெயா, உலு லங்காட், சிப்பாங், கோல லங்காட் ஆகிய மாவட்டங்களில் உள்ள 463 பகுதிகளில் அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்டது.
செமினி ஆற்று நீரில் டீசல் வாடை பிரச்சனை களையப்பட்டதைத் தொடர்ந்து சுத்திகரிப்பு மையத்தில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் நேற்று கூறியிருந்தது.
இதனைத் தொடர்ந்து இன்றிரவு 11.30 மணிக்குள் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் நீர் விநியோகம் முழுமையாக வழக்க நிலைக்குத் திரும்பும் என்றும் அது தெரிவித்தது.