பந்திங், டிச 17- மாற்றுத் திறனாளி பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ளும் மாநில அரசின் திட்டம் மக்கள் நலனில் அரசு கொண்டுள்ள அக்கறையை புலப்படுத்தும் வகையில் உள்ளது.
மாற்றுத் திறனாளி பிள்ளைகளைப் பராமரிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதோடு அதற்கு பெற்றோர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பது அவசியம் என்று சிலாங்கூர் மனவளர்ச்சி குன்றிய சிறார் பராமரிப்பு சங்கத்தின் தலைவர் எஸ். முருகையா @ ஜீவன் கூறினார்.
இத்திட்டம் தொடர்பான மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் அறிவிப்பை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம். சமூக நலனில் மட்டுமின்றி மாற்றுத் திறனாளிகள் விஷயத்திலும் மாநில அரசு கொண்டுள்ள பரிவை இது காட்டுகிறது என்று அவர் சொன்னார்.
மாற்றுத் திறனாளி பிள்ளைகளைப் பராமரிப்பது எளிதானது அல்ல என்பதோடு அதற்கு மிகுந்த பொறுமையும் தேவைப்படும். இதற்கு நல்ல உடலாரோக்கியத்துடன் இருப்பதும் அவசியமாகும் என்றார் அவர்.
இங்குள்ள சிலாங்கூர் மனவளர்ச்சி குன்றிய சிறார் பராமரிப்பு சங்கத்தில் நடைபெற்ற சிலாங்கூர் நீடித்த சமூக நல திட்டம் 2021 நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளி பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு விஷேச சுகாதார பரிசோதனைத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த மாதம் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது மந்திரி புசார் கூறியிருந்தார்.