கோலாலம்பூர், ஜன 3- நாட்டிலுள்ள நான்கு மாநிலங்களில் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம் புகுந்துள்ள வெள்ள அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று மாலை வரை சபா, ஜொகூர், மலாக்கா, பகாங் ஆகிய மாநிலங்களில் துயர் துடைப்பு மையங்கள் அதிக எண்ணிக்கையிலானவர்களை பதிவு செய்து வருகிறது.
எனினும், நெகிரி செம்பிலானில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதோடு திரங்கானுவில் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை.
இம்மாதம் 18 ஆம் தேதி முதல் வெள்ளப் பேரிடரை எதிர்நோக்கி வந்த கிளந்தான் மாநிலம் நேற்று மாலை அப்பேரிடரிலிருந்து நேற்று முற்றாக விடுபட்டது.
ஜொகூர் மாநிலத்தில் சிகாமாட், தங்காக் மற்றும் கோத்தா திங்கியில் வெள்ள துயர் துடைப்பு மையத்தில் அடைக்கலம் நாடியுள்ளவர்களின் எண்ணிக்கை நேற்று 4.00 மணியளவில் 2,022 ஆக உயர்ந்துள்ளது.
அங்குள்ள 37 துயர் துடைப்பு மையங்களில் நேற்று பிற்பகலில் 1,827 பேர் மட்டுமே தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிகாமாட் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஆர்.வித்தியாநந்தன் கூறினார்.
அம்மாவட்டத்திலுள்ள 31 கிராமங்கள், மூன்று வீடமைப்பு பகுதிகள் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள 491 கிராமங்களைச் சேர்ந்த 1,950 பேர் நிவாரண மையங்களில் தங்கியுள்ளதாக அவர் சொன்னார்.
.