ஷா ஆலம் ஜன. 13- பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசித் திட்டம் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில நடவடிக்கை பணிக்குழு வலியுறுத்தியுள்ளது.
முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்துவதில் காட்டப்பட்ட அதே தீவிரப் போக்கு ஊக்கத் தடுப்பூசியைச் செலுத்துவதிலும் காட்டப்பட வேண்டும் என்று அப்பணிக்குழுவின் இயக்குநர் டாக்டர் முகமது ஃபர்ஹான் ருஸ்லி கூறினார்.
இந்த முயற்சி விரைவுபடுத்தப்படுவதை உறுதி செய்வதில் மாநில மற்றும் மத்திய அரசுகள் உரிய பங்கினை ஆற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முதலாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்துவதற்கு நாம் என்ன செய்தோமோ அதனையை இப்போதும் செய்ய வேண்டும். ஒவ்வொரு இடமாகச் சென்று ஊக்கத் தடுப்பூசியை வழங்க வேண்டும். முன்பு போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் பல மூத்த குடிமக்கள் தடுப்பூசியைச் செலுத்துவதில் தயக்கம் காட்டி வந்தனர்.
ஆகவே, இம்முறை நாம் பின்னோக்கிச் செல்லக் கூடாது. இந்த பணி சீராக நடைபெறுவதற்கு நாம் சிறிது பணத்தை செலவிட்டுதான் ஆக வேண்டும். ஊக்கத் தடுப்பூசித் திட்டத்தில் தாம் தோல்வியைத் தழுவினால் அது பொருளாரத்திற்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றார் அவர்.
ஊக்கத் தடுப்பூசித் திட்டம் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய மத்திய அரசும் மாநில அரசும் ஒன்று பட்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.